Wednesday 28 May 2014

நம் அன்னை

மரியாவை யோவானின் தாயாகத்தானே இயேசு ஒப்ப டைத்தார். அவ்வாறெனில் அவரை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?

   "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத் தேயு 5:9) என்று இயேசு கூறுகிறார். ஒவ்வொரு மனிதரும் தமது நேரிய வாழ்வால் கடவுளின் பிள்ளைகள் ஆக முடி யும் என்பதே இதன் பொருள். கிறிஸ்து இயேசுவின் நேரிய செயல்களால் அவரை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவ ரும் இறைத் தந்தையின் பிள்ளைகளாகும் பேறு பெற்றிருக் கிறோம். "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந் தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்கு சொந்தமான பிள்ளைகளாக் கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்." (எபேசி யர் 1:3,5) இயேசுவின் தந்தையான கடவுள் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தந்தையாக இருப்பது போன்று, அவரது தாயான மரியாவும் கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் தாயாகத் திகழ்கிறார்.
   மரியாவை மனிதகுலத்தின் தாயாக்கும் கடவுளின் திட்டத்தை, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் இயேசு வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். 'இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார்.' (யோவான் 19:26-27) மரியாவை யோவானின் பாதுகாப்பில் ஒப்படைக்க இயேசு நினைத்திருந்தால், யோவானிடம்தான் முதலில் பேசியிருக்க வேண்டும். யோவானை முத லில் மரியாவிடம் ஒப்படைப்பதில் இருந்தே இயேசுவின் நோக்கம் தெளிவாகிறது. மேலும் நற்செய்தியில் யோவானின் பெயரைக் குறிப்பிடாமல் சீடரிடம் என பொதுவாக கூறுவதன் மூலம், இயேசுவின் சீடர்களாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் மரியாவைத் தாயாக ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுவதை உணர முடிகிறது. அதுவே, இயேசுவின் கடைசி விருப்பம் ஆகும்.
   'சிலுவை அடியில் நின்ற சீடர் மட்டுமே மரியாவைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்' (யோவான் 19:27) எனக் கூறப்பட்டிருந்தாலும், இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு சீடர்கள் அனைவருமே அன்னை மரியாவின் அரவணைப்பில் வாழ்ந்ததைக் காண்கிறோம். 'அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியா வோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.' (திருத் தூதர் பணிகள் 1:14) இவ்வாறு, தூய ஆவியின் வல்லமையால் கிறிஸ்து இயேசுவைப் பெற் றெடுத்த மரியாவே, பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவி வல்லமையோடு இறங்கி வந்தபோது திருச்சபையின் மக்களைப் பெற்றெடுத்தார். ஆகவே, மரியா கிறிஸ்தவர்களின் தாயானார். பாவ வாழ்வில் பங்கு பெறுவோரின் தாயாக ஏவாள் இருப்பது போல், அருள் வாழ்வில் பங்கு பெறுவோரின் தாயாக மரியா திகழ்கிறார்.

Wednesday 21 May 2014

துன்பங்கள்

மீட்புத் திட்டத்தில் மரியாவுக்கும் பங்கு இருக்கிறதென் றால், இயேசுவின் துன்பங்களிலும் அவர் பங்கேற் றாரா?

   வரலாற்றின் தொடக்கத்தில் உலகிற்கு மீட்பரை வாக்க ளித்த கடவுள், அவரது தாயைக் குறித்தும் முன்னறிவிப் பதைக் காண்கிறோம். "பெண்ணின் வித்து அலகையின் தலையைக் காயப்படுத்தும்" என்பதே மீட்பின் வாக்குறுதி. அலகையின் தலையை நசுக்கும் மீட்பரை உலகிற்கு கொண்டு வர ஒரு பெண்ணின் ஒத்துழைப்பு தேவைப்பட் டது. இவ்வாறு தீமை மற்றும் பாவத்தின் மொத்த வடிவான அலகையை ஒழிப்பதில் மீட்பரின் தாய்க்கும் கடவுள் பங்கு தந்தார். அலகைக்கு எதிரானப் போராட்டத்தில் இறைமகன் இயேசு பல சோதனைகளையும், வேதனைகளையும் சந் திக்க வேண்டியிருந்தது. மகன் அனுபவித்த இந்த துன்பங் களோடு தாயின் மனமும் ஒன்றித்திருந்தது என்பதை நாம் உறுதியாக கூற முடியும். எவ்வாறெனில், 'மரியா இந் நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித் துக் கொண்டிருந்தார்.' (லூக்கா 2:19)
   அன்னை மரியா, இயேசுவின் துன்பங்களில் பங்குபெற வேண்டுமென்பது இறைத்தந்தையின் திருவுளமாக இருந்தது. 'திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் கோவிலுக்கு வந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றினார். பின்னர் சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.' (லூக்கா 2:27,28,34-35) சிமியோன் வழியாக அறிவிக்கப்பட்ட இந்த இறைவாக்கு கன்னி மரியாவின் வாழ்வில் முழுமையாக நிறைவேறியது.
   "மீட்பு அலுவலில் மகனோடு தாய் கொண்டுள்ள இந்த ஒன்றிப்பை கிறிஸ்து கன்னியிடம் கருவாக உருவானதிலிருந்து அவரது சாவு வரை நாம் காண்கிறோம். இவ்வாறு தூய கன்னி தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பை சிலுவை வரை விடாது காத்து வந்தார்; கடவுளின் திட்டத்திற்கேற்ப சிலுவையின் அருகே நின்றார்; தம் ஒரே மகனோடு கடுமையாகத் துன்புற் றார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார். இறுதியாக, சிலுவையிலே உயிர்விட்ட அதே கிறிஸ்து இயேசுவே மரியாவைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்." (திருச்சபை எண். 57,58) "ஓ, ஆசிபெற்ற அன்னையே! உண்மையாகவே, உமது இதயத்தை ஒரு வாள் ஊடுருவியது. ஏனெனில் உமது இதயத்தை ஊடுருவினால்தானே உம் மகனின் இதயத் தில் வாள் நுழைய முடியும்" என்று புனித பெர்நார்து (1090-1153) கூறிய வார்த்தைகள் எத்துணை உண்மையானவை.

Thursday 15 May 2014

இறைத்திட்டம்

'வரலாற்றின் தொடக்கத்திலேயே மரியாவை கடவுள் தேர்ந்தெடுத்தார்' என்று கூறுவது எப்படி சரியாகும்?

   "கிறிஸ்து இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட் டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. விண்ணிலுள் ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண் டார்." கொலோசையர் 1:15-17,20) இவ்வாறு மகனாகிய கடவுளுக்காக உருவாக்கப்பட்ட உலகம், அவராலே மீட் கப்பட வேண்டுமென தந்தையாகிய கடவுள் திருவுளம் கொண்டார். கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனித குலத்தைப் பாவத்தில் இருந்து மீட்க, மகனாகிய கடவுள் மனிதரின் உருவை ஏற்கத் திருவுளம் கொண்டார். அவ ருக்கு மனித உடலைக் கொடுக்க அன்னை மரியாவை தொடக்கம் முதலே கடவுள் முன்குறித்து வைத்திருந்தார். ஏனெனில், கடவுளின் திட்டம் ஒரு தாய் வழியாக நிறை வேற வேண்டியிருந்தது.
   வரலாற்றின் தொடக்கத்தில் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்ததால், முதல் பெற்றோர் தங்களின் அருள்நிலையை இழந்து தீமையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டனர். கடவுளுடனான உறவை இழந்து பாவத்துக்கு அடிமையான மனிதகுலத்தை விடுவிக்க மகனாகிய கடவுளை மீட்பராக அனுப்ப தந்தையாம் கடவுள் திருவுளம் கொண்டார். உலக மக்களின் பாவங்களைப் போக்க வரும் இந்த மீட்பர், ஒரு தாயின் வயிற்றில் தோன்றி மானிட மகனாக பிறக்க வேண்டுமென்பது இறைத்திட்டமாக இருந்தது. இதையே கடவுள், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்" (தொடக்க நூல் 3:15) என்ற மீட்பின் வாக்குறுதியாக அளிக்கிறார். இவ்வாறு கடவுளின் திட்டத்தில் தொடக்கம் முதலே மரியா இடம் பெற்றிருந்ததைக் காண்கிறோம்.
   "அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டு 'காலம் நிறைவேறியபோது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.' (கலாத்தியர் 4:4-5). இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்தார். மீட்பின் இந்த மறைபொருள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுத் திருச்சபையில் தொடர்ந்து நீடிக்கிறது." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "நெடுங்கால காத்திருப்புக்குப் பிறகு, சீயோனின் மகளாகிய மரியாவில் கடவுளின் திட்டம் முழுமை பெற்றது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 489) கடவுள் அளித்த வாக்குறுதியின் நிறைவாக இயேசு தோன்றியதால், மரியாவை வரலாற்றின் தொடக்கத்திலேயே கடவுள் தேர்ந்தெடுத்தார் என்பது நிரூபணமாகிறது.

Wednesday 7 May 2014

அமல உற்பவம்

'மரியா பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

   "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்று இயேசு கூறுகிறார். கடவுளைக் காண வேண்டுமானால் தூய மனம் தேவை என்பதே இதன் பொருள். கடவுளைக் காண்பதற்கே தூய்மையான உள்ளம் தேவை என்றால், அவரைத் தம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த கன்னி மரியா எவ்வளவு தூயவராக இருந்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. அடிமையின் வடிவை ஏற்ற இறைமகனுக்கு தாயாகுமாறு கடவுளுக்கு தம்மையே அடிமையாக அர்ப்ப ணித்த கன்னி மரியா, மிகத் தூயவரான கடவுளைக் கருத் தாங்குமாறு மிகத் தூயவராக பிறக்க வேண்டுமென கட வுள் விரும்பினார். "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொ ளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இயேசுவை" (எபிரேயர் 1:3) கருத்தாங்கிப் பெற் றெடுக்குமாறு மரியா தம் தாயின் வயிற்றிலேயே பாவம் இல்லாமல் உற்பவித்தார்.
   முதல் ஏவாள் கடவுளின் கட்டளையை மீறியதால் பாவம் உலகில் நுழைந்தது. புதிய ஏவாளான மரியா கடவுளின் விருப்பத்துக்கு கீழ்ப்படிந்ததால் மீட்பு உலகிற்கு வந்தது; மரியாவின் வழியாக இறைமகனும் மீட்பருமான இயேசு இவ்வுலகில் பிறந்தார். கடவுளின் விருப்பத்துக்கு முரணாக செயல்படும் மனித இயல்பே தொடக்கப் பாவம் அல்லது ஜென்மப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தம் தாயின் வயிற்றில் உருவாகும் பொழுதே, இந்த தொடக்கப் பாவத்தின் கரையுடனே பிறக்கிறார். ஆனால் கடவுளின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் என்பதால், அவரது திட்டம் நிறைவேறு வதற்காகவே மரியா இவ்வுலகில் அமல உற்பவியாகத் தோன்றினார். "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்" (லூக்கா 1:49) என்ற சொற்கள், தொடக்கப் பாவத்தின் கறை மரியாவை மாசுபடுத்த முடியவில்லை என்ப தையே பறைசாற்றுகின்றன.
   "தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் மரியாவை அழைத்த கடவுள், தம் வல்லமையால் இவ்வுலகின் தீய நாட்டங்களில் இருந்து அவரை விலக்கி காத்து, தம் இறைத்தன்மையில் பங்குபெறச் செய்தார்." (2 பேதுரு 1:3-4) இதன் காரணமாக, "மிகவும் ஆசிபெற்ற கன்னி மரியா உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, எல்லாம் வல்ல கடவுளின் தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும், மனிதகுல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பெருபலங்களினாலும், தொடக்கப் பாவத்தின் அனைத்து கரைகளில் இருந்தும் பாதுகாக்கப்பட்டார்" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 491) என்று திருச்சபை பறைசாற்றுகிறது. மீட்பரின் தாயாகுமாறு வரலாற் றின் தொடக்கத்திலேயே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், மரியா பாவம் இல்லா மல் உற்பவித்தார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவேதான் வானதூதர் மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க!"என வாழ்த்தினார்.