Wednesday 25 June 2014

விடிவெள்ளி

மரியாவை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?

   'விடியற்காலத்தின் நட்சத்திரம்' அல்லது 'விடிவெள்ளி' என்பது அதிகாலையில் வானில் தோன்றும் 'வெள்ளி' கோளைக் குறிக்கின்றது. கிழக்குத் திசையில் காட்சியளிக் கும் இந்தக் கோள், சூரிய உதயத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டவர் கள் விடிவெள்ளியைக் கொண்டே திசையை அறிந்ததால், இது 'கடலின் விண்மீன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே, மரியா என்றப் பெயரின் பொருளாகும். எனவே இயேசுவின் தாய் மரியாவை 'விடிவெள்ளி' என்று அழைப் பது, நேரடியாக அவரது பெயரையே குறித்து நிற்கிறது. அதேநேரத்தில், இது கடவுளால் வழங்கப்பட்ட காரணப் பெயராகவும் விளங்குகிறது. ஏனெனில் இயேசு என்ற ஆத வனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளியா கவே உலக வரலாற்றில் மரியா தோன்றினார்.
   சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் விடிவெள்ளியைப் போன்று, மரியாவும் இயேசுவின் ஒளியால் பிரகாசிக்கி றார். கதிரவனின் பண்புநலன்களை விடிவெள்ளி பிரதி பலிப்பது போல, இயேசுவின் மாட்சியைப் பிரதிபலிப்பவராக மரியா திகழ்கிறார். "இதனால் தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப்பெற்ற, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த உறுப்பாக வும், நம்பிக்கை மற்றும் அன்பின் முன்குறியாகவும் மரியா போற்றப்பெறுகின்றார். கத்தோ லிக்கத் திருச்சபையும் தூய ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்புநிறைத் தாயாக அவரை ஏற்கின்றது." (திருச்சபை எண். 53) "இவர் கிறிஸ்து வின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்." (திருச்சபை எண். 54) எனவே, நமக்கு இறையாட்சியின் விடியலைக் காட்டும் விடிவெள்ளியாக மரியா விளங்கு கிறார் என்பதில் சந்தேகமில்லை.
   கீழ்த்திசை அடிவானத்தில் தோன்றும் விடிவெள்ளி, கடல் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர வழி செய்கிறது. நீண்ட நெடிய கடல் பயணத்தில் நம்பிக்கைச் சுடராக விடிவெள்ளி திகழ்கிறது. அவ்வாறே, மரியாவும் மனிதகுலத்தின் நெடும்பயணத்தில் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக ஒளி வீசுகிறார். முதிர்ந்த வயதில் கருவுற்ற எலிசபெத்துக்கும், கானா ஊர் திருமண வீட்டினருக்கும் தேவையறிந்து உதவி செய்ததன் மூலம் மரியா நம்பிக்கையின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நமது வாழ்வில் இருள் சூழும் நேரங்களிலும், நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக வழிகாட்டவும் உதவி செய்வும் மரியா தயாராக இருக்கிறார். "இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை, பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான நம்பிக்கை யின் அடையாளமாக மரியா ஒளிர்கின்றார்." (திருச்சபை எண். 68)

Wednesday 18 June 2014

வானக மாட்சி

'மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்பதை உறுதி செய்ய முடியுமா?

   "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மக னைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்ற தில்லை" (யோவான் 3:13) என்ற இயேசுவின் கூற்றே இந்த சந்தேகத்துக்கு அடிப்படையாக அமைகின்றது. ஆனால் விண்ணகத்திற்கு ஏறிச்செல்வதும், விண்ணகத்திற்கு எடுத் துக்கொள்ளப்படுவதும் வெவ்வேறானவை என்பதைப் புரிந் துகொண்டால் இதற்கு தீர்வு கிடைத்துவிடும். ஏனோக்கின் விண்ணேற்பு பற்றி விவிலியம் பின்வருமாறு கூறுகிறது: 'ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.' (தொடக்க நூல் 5:24) இறைவாக்கினர் எசாயாவின் விண்ணேற்பை விவரிக்கும் வார்த்தைகள் இவை: 'இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்திற்குச் சென்றார்.' (2 அரசர்கள் 2:11)
   கடவுளோடு நடந்த ஏனோக்கும், கடவுளின் வாக்கை அறிவித்த எலியாவும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மை என்கிறபோது, மனிதராய் தோன்றிய இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியா விண்ணகத் திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மையே என்பது தெளிவாகிறது. "அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்" (1 கொரிந்தியர் 15:53) என்ற வார்த்தைகளுக்கு ஏற்பவே மரியாவின் விண்ணேற்பு நிகழ்ந்தது. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது" (மத்தேயு 5:37) என்று வாக்களித்த இயேசு, 'தம் அன்னையின் தாழ்நிலையைக் கண்ணோக்கி, எல்லாத் தலைமுறையினரும் அவரைப் பேறு பெற்றவர் எனப் போற்றும் வகையில் அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.' (லூக்கா 1:48-49)
   "மாசற்ற கன்னி மரியா, ஆதிப் பாவக்கறை எதுவுமின்றி பாதுகாக்கப்பட்டு, இறுதியாக தம் மண்ணுலக வாழ்வு நிறைவுற்றதும், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணுலக மாட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். மேலும் அனைத்துக்கும் அரசியாகவும் ஆண்டவரால் உயர்த்தப்பட் டார். இவ்வாறு ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவரும், பாவம் மற்றும் சாவின் மீது வெற்றி கண்டவருமான தம் மகனுக்கு இன்னும் முழுமையாக ஒத்தவரானார். புனித கன்னியின் விண்ணேற்பு அவரது மகனின் உயிர்ப்பில் தனிப்பட்ட பங்கேற்பாகவும் மற்ற கிறிஸ்தவர்களின் உயிர்ப்புக்கு முன்னடையாளமாகவும் இருக்கிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 966) "வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட் டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்" (திருவெளிப்பாடு 12:1) என்னும் வார்த்தைகள் அன்னை மரியாவின் விண்ணக மாட்சியை உறுதி செய்கின்றன.

Wednesday 11 June 2014

அடைக்கலம்

கடவுள் மட்டும்தானே பாவங்களை மன்னிக்க முடியும்! மரியாவைப் 'பாவிகளின் அடைக்கலம்' என்று அழைப் பது ஏன்?

   "கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" (மாற்கு 2:7) என்பது அனைவரின் உள் ளத்திலும் எழும் கேள்வி. இறைமகன் இயேசு பாவங்களை மன்னித்ததன் மூலம், பலரும் உடல், உள்ள, ஆன்ம நலன் களைப் பெற்றனர். இயேசுவுடனான சந்திப்பு பலரது வாழ் வில் புதிய மாற்றத்தை உருவாக்கியதைக் காண்கிறோம். இயேசு தம்மை நெருக்கமாகப் பின்தொடர்ந்த சீடர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கியதைக் காண்கிறோம்: "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப் பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங் களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா." (யோவான் 20:23) பாவம் இல்லாமல் உற்பவித்து உலக மீட்பரின் தாயான மரியாவும், இத்தகைய பாவ மன்னிப்பு அதிகாரத்தால் பாவிகள் மீட்படைய உதவுகிறார் என்பதே திருச்சபையின் போதனை.
   "மரியா உண்மையிலேயே, கிறிஸ்துவின் உறுப்புகளா கிய கிறிஸ்தவர்களுக்கு தாயாகத் திகழ்கின்றார். ஏனெனில், அந்த தலையானவரின் உறுப்புக ளாக நம்பிக்கை கொண்டோர் திருச்சபையில் பிறக்கும்படி அன்பினால் அவர் ஒத்துழைத்தார்." (திருச்சபை எண். 53) "என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின் றது" (லூக்கா 1:47) என்று பாடிய மரியா, மக்கள் அனைவரும் மீட்பு பெறுமாறு ஆண்டவரிடம் இடைவிடாது பரிந்துபேசி வருகிறார். "தலைமுறை தலைமுறையாய் இரக்கம் காட்டி வருகிற வர்" (லூக்கா 1:50) என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்த மரியா, தம்மை நாடி வரும் பாவிகளின் ஈடேற்றத்துக்காக ஆண்டவரின் இரக்கத்தை பெற்றுத் தருகிறார்.பாவங்கள் மன்னிக்கப்பட தம் மகனிடம் பரிந்து பேசும் மரியா, பாவிகளை நல்வழிப்படுத்துவதிலும் தாய்க்குரிய அன்போடு உதவி செய்து வருகிறார்.
   ஆகவேதான், "பாவத்தை வென்று தூய்மை நிலையில் முன்னேற முயற்சிக்கும் கிறிஸ் தவர்கள், தேர்ந்து கொள்ளப்பட்ட அனைவருக்கும் நற்பண்புகளின் முன்மாதிரியாக மிளிரும் மரியாவை நோக்கித் தம் கண்களை அவர்கள் உயர்த்துகின்றனர்." (திருச்சபை எண். 65) இயேசுவுக்கு மட்டுமின்றி திருச்சபையின் மக்கள் அனைவருக்கும் தாயாகத் திகழும் மரியா, இயேசுவைப் போன்று அவரது சகோதர சகோதரிகளான நாம் அனைவரும் நிறை வுள்ளவர்கள் ஆகுமாறு தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார்; பாவிகள் அனைவரும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்து வழியாக தந்தையாம் கடவுள் அருளும் மீட்பைப் பெற்றுக்கொள்ளுமாறும் செய லாற்றி வருகிறார். விண்ணகத்தில் கடவுளின் மாட்சியில் பங்கு பெற்றுள்ள அன்னை மரியா, பாவிகளுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத்தர சோர்வின்றி பரிந்துபேசி வருவதால் 'பாவிகளுக்கு அடைக்கலம்' என்று அழைக்கப்படுகிறார்.

Wednesday 4 June 2014

வெற்றியாளர்

இயேசுதானே சாத்தானை வெற்றிகொண்டார்! அப்படி யிருக்க மரியாவை சாத்தானை வெல்பவர் என ஏன் அழைக்க வேண்டும்?

   "தொடக்கத்திலிருந்தே பாவம் செய்து வரும் அலகை யின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு இவ்வுலகில் தோன்றினார்" (1 யோவான் 3:8) என்பதே நாம் பெற்றுள்ள மீட்பின் நற்செய்தி. மனிதகுல மீட்பரான இயேசு மனிதராகப் பிறக்க வழியாக இருந்தவர் என்பதால், கடவுளின் திட்டத்தில் மரியா சிறப்பிடம் பெறுகிறார். உல கின் பாவத்தைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியான இயேசுவின் தாய் ஆகுமாறு, மரியா மாசற்றவராய் படைக் கப்பட்டார். பாவத்தின் கறை படாமல் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த மரியா, "பாவத்தின் மீதும் சாவின் மீதும் வெற்றி கண்டவரான தம் மகனுக்கு இன்னும் அதிக நிறை வாக ஒத்தவராகுமாறு விண்ணுலக மாட்சிக்கு கடவுளால் உயர்த்தப் பெற்றார்." (திருச்சபை எண். 59) எனவே, சாத் தானை வெற்றி கொள்ளும் 'கடவுளின் இயல்பு மரியாவிட மும் இருக்கிறது.' (1 யோவான் 3:9)
   "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்" (லூக்கா 10:18-19) என்ற இயேசுவின் வார்த்தைகள், சாத்தானை வெல்லும் அதிகாரத்தை சீடர்களுக்கு வழங்குகின்றன. "ஆட்டுக் குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் சாத்தானை வென்றார் கள்" (திருவெளிப்பாடு 12:11) என்று மறைநூல் கூறுகிறது. இவ்வாறு கிறிஸ்துவின் மீது நம் பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டவரின் வல்லமையால் சாத்தானை வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கும்போது, இயேசுவின் தாய் மரியாவுக்கும் இந்த ஆற்றல் இருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கு எங்கே இடம் இருக்கிறது?
   அனைத்துக்கும் மேலாக, "புதிய ஏவாளாகிய மரியா, ஆதிப்பாம்பாகிய அலகைக்குச் செவிமடுக்காமல் கடவுளின் தூதரிடம் ஐயமற்ற நம்பிக்கை கொண்டதால், உலக மீட்பராக கடவுளால் நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார்." (திருச்சபை எண். 63) இவ்வாறு உலகின் மீட்புக்கு வழி திறந்ததால், சாத்தான் என்று அழைக்கப்படும் அலகையின் வீழ்ச்சிக்கு மரியாவே காரணமாக அமைந்தார். சாத்தானை வெற்றிகொண்டவர் கிறிஸ்து இயேசுவே என்றாலும், அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த மரியாவுக்கும் அந்த வெற்றியில் கடவுள் பங்கு அளித்தார். இவ்வாறு, "அமைதி தரும் கடவுள், மரியாவின் காலடியில் சாத்தானை நசுக்கிப் போட்டுள்ளார்." (உரோமையர் 16:20) எனவே, பாவிகளின் அடைக்கலமான மரியா சாத்தானை வெல்பவராகத் திகழ்கிறார் என்பதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.