Wednesday 26 March 2014

கன்னித் தாய்

"இயேசு பிறந்த பிறகும் மரியா கன்னியாக இருந்தார்" என்று எப்படி கூற முடியும்?

   "தூய்மையான உள்ளத்தோரே கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்கிறார் இயேசு. அப்படியெனில், மனித உருவில் தோன்றிய இறை மகனைக் கருத்தாங்கிய கன்னி மரியா, உடலிலும் உள்ளத்திலும் எத்துணை தூயவராக இருந்திருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண் டியதில்லை. 'இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக் கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்" என்று இறை வாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவே றவே இவை யாவும் நிகழ்ந்தன.' (மத்தேயு 1:18,22) என்று நற்செய்தி கூறுவதில் இருந்தே, ஆண்டவரின் மீட்பு திட்டத் தில் முன்குறிக்கப்பட்டவர் மரியா என்பது தெளிவாகிறது.
   கன்னி மரியாவின் வயிற்றில் இயேசுவின் உடலை உரு வாக்குமாறு "தூய ஆவி அவரில் குடிகொண்டிருந்ததால், அவர் ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருந்தார்." (உரோ மையர் 8:9) தூய ஆவியின் ஆலயமாகவும், இறைமகன் இயேசுவின் தாயாகவும் திகழ்வது மரியாவுக்கு "கடவுள் அளித்த தனிப்பட்ட அருள்கொடை" (1கொரிந்தியர் 7:7) ஆகும். "தூய ஆவி யின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது" (கலாத்தியர் 5:17) என்பதால், கடவுளுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்த மரியா, வாழ்நாள் முழுவதும் கன்னியாகவேத் திகழ்ந்தார் என்ப தில் சந்தேகமில்லை. "மரியாவின் கன்னிமையே, கடவுள் மனித உடலெடுத்ததன் தூய தொடக் கத்தை வெளிப்படுத்துகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 503)
   "கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவ ரது தீர்மானத்தால் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரிய வராக மரியா திகழ்கிறார்." (எபேசியர் 1:11) "மரியாவின் வாழ்வு கிறிஸ்துவோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்து இவ்வுலகில் மனிதராய்த் தோன்றுவதற்காக, மரியாவும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றினார்." (கொலோசையர் 3:3-4) "உண்மையில், கிறிஸ்துவின் பிறப்பு அவரது தாயின் கன்னிமையை குறைவுபடுத்துவதற்கு பதிலாக புனிதப்படுத்தியது. எனவே திருச்சபையின் திருவழிபாட்டில் மரியா, 'எப்பொழுதும் கன்னி' என்று கொண்டாடப்படுகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 506)

Wednesday 19 March 2014

பேறுபெற்ற தாய்

"உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" (லூக்கா 11:27) என்று ஒரு பெண் கூறிய போது, இயேசு அதைப் பொருட்படுத்தவே இல்லையே?

   'இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தி லிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.' (லூக்கா 11:27) "இது முதல் எல்லாத் தலை முறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக்கா 1:48) என்ற மரியாவின் இறைவாக்கு நிறைவேறுவதை இங்கு முதல்முறையாக காண்கிறோம். இதனை முன்னி றுத்தியே இயேசு அளிக்கும் பதிலும் அமைந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது: "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற் றோர்." (லூக்கா 11:28) அந்த பெண் கூறியது தவறு என்று இயேசு கூறவில்லை. தம்மைப் பெற்று வளர்த்ததால் மட் டுமல்ல, இறைவார்த்தையைக் கடைபிடித்து வாழ்ந்ததா லும் 'மரியா மிகவும் பேறுபெற்றவர்' என இயேசு புகழ்ந் துரைக்கிறார்.
   "காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனைப் பெண் ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." (கலாத்தியர் 4:4-5) "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்." (எபிரேயர் 1:3) இவ்வாறு அனைத்தையும் தாங்கி நடத்தும் வார்த்தையான இறைவனையே தாழ்ச்சியால் தம் வயிற்றில் கருத்தாங்கும் பேறு பெற்றவர் மரியா. "தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்த படியே, அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்" (லூக்கா 1:69-70) என செக்கரியா இறைவாக்காக உரைத்தது மரியா இயேசுவைக் கருத்தாங் கியது பற்றியே என்பது தெளிவு.
   "மரியா, தம் நம்பிக்கையின் அடையாளத்தை எந்த சந்தேகத்தாலும் கறைபடுத்திக் கொள்ளா மல், கடவுளின் திருவுளத்துக்கு தம் கன்னிமையை முழுமையான கொடையாக அர்ப்பணித் தார். மரியாவின் நம்பிக்கையே, அவரை 'மீட்பரின் தாய்' ஆக்கியது. கிறிஸ்துவின் உடலைக் கருத்தாங்கியதைக் காட்டிலும், கிறிஸ்துவில் முழுமையான நம்பிக்கை கொண்டதால் மரியா மிகவும் பேறுபெற்றவராக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 506) இவ்வாறு தம் உடலிலும் உள்ளத்திலும் கன்னிமை பழுதுறாதவராக வாழ்ந்ததால்தான், மரியாவால் மானிடமகனாகத் தோன்றிய இறைமகன் இயேசுவை வளர்த்து ஆளாக்க முடிந் தது. ஆண்டவரையே தம் மகன் என்று அழைக்கும் பேறுபெற்றவர் மரியாவைத் தவிர யார்?

Wednesday 12 March 2014

கடவுளின் தாய்

இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவி யான மரியாவை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

   '"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப் பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே' (மத்தேயு 1:22) இறைமகன் இயேசு மனிதர் ஆனார். கடவுளும் மீட்பருமானவரின் தாயாகுமாறு தனிப் பட்ட அருள் வரங்களாலும், அலுவல்களாலும் அணி செய் யப்பட்டவராக மரியா திகழ்கிறார். இறைவனின் திட்டத் தால், கன்னியாக இருந்து கொண்டே தாயாகும் வரம் பெற் றவர் மரியா. "கணவரையே அறியாத அவர் தூய ஆவி நிழலிடத் தம் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் இறைத் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார்." (திருச் சபை எண். 63) எனவே. மரியாவின் தன்னுரிமையுள்ள ஒத் துழைப்பின் வழியாகவே "கடவுள் மனிதராகி நம்மிடையே குடிகொண்டார்" (யோவான் 1:14) என்பது தெளிவாகிறது.
   "நற்செய்திகளில், 'இயேசுவின் தாய்' என்று அழைக்கப்ப டும் மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் முன்பே, அவரை 'ஆண்டவரின் தாய்' என தூய ஆவியின் தூண்டுதலால் எலிசபெத் அழைத்தார். உண்மையில், தூய ஆவியால் கன்னி மரியாவின் வயிற்றில் மனிதராக கருவான அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளும், இறைத்தந்தையின் நித்திய மகனுமானவர், உடல் சார்ந்த முறையில் உண்மையிலேயே மரியாவின் மகன் ஆனார். எனவே, திருச்சபை மரியாவை உண்மை யாகவே 'கடவுளின் தாய்' (Theotokos) என்று அறிக்கையிடுகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 495) கண்ணுக்குப் புலப்படாதவரும், உலகமே கொள்ள முடியாதவருமான கடவுளை, தம் வயிற்றில் சுமந்து பெற்ற மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.
   "திருச்சபை முதலில் தோன்றிய காலத்தில் இருந்தே, இயேசு தூய ஆவியின் வல்லமை யாலே கன்னி மரியாவின் திருவயிற்றில் கருவானார் என்பதை அறிக்கையிடுகிறது; 'மனித வித்தின்றி தூய ஆவியின் வல்லமையால்' இயேசு கருவான நிகழ்வை உடல் சார்ந்த நிலை யில் உறுதிப்படுத்துகிறது. கன்னி கருத்தாங்குதலை, இறைமகன் நம்மைப் போன்று மனிதரா னதை உறுதிப்படுத்தும் அடையாளமாக திருச்சபைத் தந்தையர் காண்கின்றனர். எனவே அந்தி யோக்கு புனித இக்னேசியு, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்: தூய கன்னியே, நீர் உறுதியாக நமது ஆண்டவரைக் கருத்தாங்கினீர்." (கத்தோலிக்க திருச் சபையின் மறைக்கல்வி எண். 496) "மனிதரான நித்திய இறைமகனும், கடவுளுமானவரின் தாயாக இருப்பதால், மரியா உண்மையிலேயே 'கடவுளின் தாய்'தான்!" (கத்தோலிக்க திருச் சபையின் மறைக்கல்வி எண். 509)

Wednesday 5 March 2014

இயேசுவின் தாய்

நாம் மரியாவை 'இயேசுவின் தாய்' என்று அழைத்தா லும், இயேசு அவரை 'பெண்ணே!' என்று சாதாரண மாகத்தானே அழைத்தார்?

   'பெத்லகேமில் இருந்தபொழுது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். குழந் தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தபோது, அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.' (லூக் 2:6-7,21) இவ்வாறு நற்செய்தியாளர் கூறுவதில் இருந்து 'மரியா இயேசுவின் தாய்' என்பது தெளிவாகிறது. இயேசு வளர்ந்த ஊர் மக்கள் அவரை, 'மரியாவின் மகன்' என்றே அழைத்தனர். "இவருடைய தாய் மரியா என்பவர்தானே?" (மத்தேயு 13:55) "இவர் மரியாவின் மகன் தானே!" (மாற்கு 6:3) என்று நாசரேத்து ஊரினர் கூறியதாக நற்செய்தி தெளி வாக எடுத்துரைக்கிறது. இயேசு இறைமகனாக இருந்தா லும், தம்மை "மானிடமகன்" (மத்தேயு 16:13) என்று கூறி வந்ததன் மூலம் தம் தாய் மரியாவைப் பெருமைப்படுத்தி னார். இவ்வாறு இயேசு, தம்மைப் பெண்ணின் வித்தாக வும், புதிய ஆதாமாகவும் அடையாளப்படுத்துகிறார்.
   இறைத்தந்தையின் மீட்புத் திட்டத்தில் புதிய ஆதாமாகத் திகழ்ந்த இயேசுவுக்குத் துணைநிற்கும் புதிய ஏவாளாக மரியா செயல்படுவதை காண்கிறோம். முதல் ஆதாமுக்குத் தகுந்த துணையாக முதல் ஏவாள் படைக்கப்பட்டதுபோல (தொடக்க நூல் 2:20-23), புதிய ஆதாமான இயேசுவுக்காக புதிய ஏவாளான மரியாவும் அருள்நிலையில் படைக்கப்பட்டார். இயேசுவின் மீட்பு பணியில் நம்பிக்கையோடு ஒத்துழைத்ததால், மரியா நம்பிக்கை கொண்டோரின் தாயாக விளங்குகிறார். இவ்வாறு, " உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்" (தொடக்க நூல் 3:15) என்ற முன்னறிவிப்பை நிறைவேற்றிய பெண்ணாக மரியா திகழ்கிறார். இதை சுட்டிக்காட்டவே, இயேசு தம் வாழ்வின் இரண்டு முக்கியத் தருணங் களில் மரியாவை "பெண்ணே!" என்று அழைக்கிறார்.
   முதலாவதாக இயேசு இறையாட்சி பணியைத் தொடங்கிய காலத்தில், கானாவூர் திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதை கூறும் மரியாவிடம், "பெண்ணே, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" (யோவான் 2:4) என இயேசு கேட்கிறார். இருந்தாலும் மரியாவின் நம்பிக்கையால், தண்ணீர் திராட்சை இரசமான முதல் அற்புதத்தை இயேசு நிகழ்த்துவதைக் காண்கிறோம். ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணமாக இருந்ததைப்போல, இயேசு அற்புதம் நிகழ்த்த மரியா காரணமாக இருக்கிறார். இரண்டாவது, உலக மீட்புக்காக இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில், தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "பெண்ணே, இவரே உம் மகன்" (யோவான் 19:26) என்றார். இவ்வாறு இயேசு, தம் சீடர்கள் அனைவரையும் மரியாவின் பிள்ளைகளாக ஒப்படைத்தார். எனவே, மண்ணில் வாழ்வோர் அனைவருக்கும் தாயாக ஏவாள் இருப்பது போன்று, விண்ணக வாழ் வுக்கு தகுதிபெறும் அனைவருக்கும் தாயாக மரியா திகழ்கின்றார்.